சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதன் பின் விஜய் எங்கும் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. இதுகுறித்து சேலம் காவல்துறை சார்பில் தவெகவினருக்கு விளக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,” டிசம்பர் .4-ம் தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை. குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும். அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.


