அதிக கனமழை காரணமாக விழுப்புரம், கடலூரில் பள்ளிகளுக்கு இன்று(நவம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரும். நம்பர் 22-ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த் தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி,  திருநெல்வேலி,  தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 8  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று, கடலூரில் கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும், விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.