பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் ஜாய் கிரிசில்டா திருமணம் செய்ததாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் புகார் கூறியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து அதன் முகத்தை மறைத்த புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னை இரண்டாவது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். அதில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், டிஎன்ஏ ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.
செப்டம்பர் 2025-ல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கெனவே அளித்துள்ளேன். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகையாகவும், தனது பிஎம்டபிள்யூ காருக்கு 1.25 லட்ச ரூபாய் மாதாந்திர இஎம்ஐயையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கெனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.


