வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 4) தொடங்குகிறது.
பிஹார் மாநிலத்தில் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision – SIR) எனப்படும் விரிவான சரிபார்ப்புச் செயல்பாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான லாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டு சேர்ந்து வாக்காளர்களை நீக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த சிறப்பு தீவிரத் திருத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்தியது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியை நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ம் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக 9-ம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். மூன்றாம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பெறப்படும். நான்காம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


