அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் தெரிவித்துள்ளார்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்த நிலையில், அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜை விழாவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரனுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட செங்கோட்டையன், சசிகலாவையும் நேரில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் எடப்பாடி மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியடைந்தார். ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலக பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை செங்கோட்டையன் அகற்றினார்.
இந்த நிலையில், கோவையில் இன்று (நவம்பவர் 3) விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரச்னைகளைப் பார்க்கும் போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய (எடப்பாடி பழனிசாமி) அரசியலிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களின் தலையீடு இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை.
புரட்சி தலைவர் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் என் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றி கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்பது தான் தத்துவம்” என்று கூறினார்.


