ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து பசும்பொன் வந்தால் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குரு பூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சி, சமூக அமைப்புகளின் தலைவர்கள் பசும்பொன் வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெப்பக்குளம் அருகே உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். பசும்பொன்னில் தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையில் மதுரையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் பசும்பொன்னுக்கு ஒரே காரில் சென்றனர். அதிமுக கொடி கட்டிய காரில் செல்லும் அவர்கள், அமமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தேவர் ஐயா என்பவர் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், சாதியைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவானவர். தேசபக்தி மிக்கவர். தேசத்திற்காக பாடுபட்டவர். மக்களுக்காக பாடுபட்டவர். அப்படியிருக்கும் ஒருவருக்கு அனைவரும் புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது” என்றார். ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அவர்,” தெரியவில்லை.. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.


