ஜமைக்காவை சூறையாடிய மெலிசா புயல் கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதனால் 6 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
ஜமைக்காவில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பேரழிவை மெலிசா புயல் ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் நிலை கொண்ட புயலாக வலுப்பெற்ற மெலிசா புயல், மணிக்கு 300 கிமீ வேகத்தில் ஜமைக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளை தாக்கியது. இதனால் அதி கனமழை பெய்ததுடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த சூறாவளி புயலால் 10 பேர் உயிரிழந்தனர். அதில் ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.
ஜமைக்காவை புரட்டிப்போட்ட புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த புயல் குறித்து ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்லென்ஸ் கூறுகையில், ” எங்கள் வரலாற்றில் மிகவும் பயங்கரமான சூறாவளியாக மெலிசா பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஐந்தாம் வகை புயலால் எங்கள் நாடு மட்டுமல்ல, எந்த கட்டமைப்பும் தாங்காது. ஏராளமான மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஜமைக்காவை தகர்த்த மெலிசா சூறாவளி புயல், அந்நாட்டின் மான்டெகோ விரிகுடாவில் இருந்து கிழக்கு-வடகிழக்கில் 50 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ளது. குவாண்டனாமோவில் இருந்து தென்மேற்கில் 160 மைல் தொலைவில் மூன்றாம் நிலை சூறாவளியாக மாறி, தற்போது கியூபா மற்றும் பஹாமசை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையம் கூறி உள்ளது. இதனால் கியூபாவில் உள்ள சாண்டியாகோ டிகியூபா, குவாண்டனாமோவில் தாழ்வான பகுதிகளில் இருந்து 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற தொடங்கியுள்ளனர்.


