இரண்டு அலுவலகங்களில் ஒருநாள் கூட வேலைக்குச் செல்லாமல் லஞ்சத்தை ரூ.37.54 லட்சத்தை சம்பளமாக ஐ.டி அதிகாரியின் மனைவி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், தகவல் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குநராக பணியாற்றுபவர் பிரத்யுமான் திக்ஷித். இவரது மனைவி பூனம் திக்ஷித். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், ராஜஸ்தான் மாநில அரசின் ஒப்பந்தங்களைப் பெற்று வந்துள்ளன.
இந்த ஒப்பந்தங்களை இந்த நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குநரான பிரத்யுமான் திக்ஷித் வழங்கியுள்ளார். இதற்காக இவர் லஞ்சமாக, இந்த இரண்டு நிறுவனங்களிலும் தனது மனைவி பூனம் திக்ஷித்தை ஊழியராக பணிபுரிவதாக கணக்குகாட்டி வேலைக்கு அனுப்பாமலேயே சம்பளம் பெற்று வந்துள்ளார். இதையறிந்த ஒருவர், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த பிரச்னை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை பூனம் திக்ஷித்தின் ஐந்து வங்கிக் கணக்குகளில் ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சம்பளமாக ரூ.37,54,405 செலுத்தியது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த காலக்கட்டத்தில் இரண்டு அலுவலகங்களுக்கும் பூனம் திக்ஷித் ஒரு நாள் கூட வேலைக்குச் சென்றதில்லை.
ஆனால்,அவர் வேலைக்கு சென்றதாக கணக்கு காட்டப்பட்ட போலி வருகைப் பதிவேட்டுக்கு, அவரது கணவர் பிரதியுமான் திக்ஷித் ஒப்புதல் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அரசின் மாநில உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியான பிரத்யுமான் திக்ஷித் மீது உயர்நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


