வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22) பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை (வியாழக்கிழமை) வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இப்போது வரை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இன்று அது புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் வெளியாகும் என்றும் இன்று அது புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் வெளியாகும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்தலைவர் அமுதா தெரிவித்திருந்தார்.
இதுதவிர தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரபிக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்திலும் நீடிக்கிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும். இந்த காரணங்களால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட், மிக அதிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர். விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


