தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது.
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். அதற்காக இன்று முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நான்கு நாட்களும் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,900 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பிற ஊர்களில் இருந்து இந்த நான்கு நாட்களும் 6,110 சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்பு அக்டோபர் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது. மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று மொத்தம் 2,852 பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 2,165 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 1,935 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,145 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
வருகிற அக்டோபர் 19-ம் தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 1,040 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,610 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக் கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


