உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அந்த நாட்டிற்கு 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், “உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்னையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
டோமாஹாக் ஏவுகணை என்பது 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும். இதன் மூலம் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கோரியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


