இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் நாகையைச் சேர்ந்த 11 மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்களுடைய மோட்டார் என்ஜின் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்தவர்கள் சந்திரபாபு(60). சசிகுமார்(30). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகளில் விக்னேஷ்(28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27), சசிகுமார்(30), உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 11 பேர் நேற்று பிற்பகல் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்கள் 11 பேரையும் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அத்துடன் அவர்களிடம் இருந்த வெள்ளிச் செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, வாக்கி டாக்கி. இகோ சவுண்டர், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த 11 மீனவர்களும் இன்று அதிகாலை கரை திரும்பினர். இந்த தாக்குதல் குறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த 11 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


