எவரெஸ்ட் மலைத் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் உள்ள உயரமான மலை முகாம்களில் 1,000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட கடுமையான பனிப்புயலைத் தொடர்ந்து அங்கு முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. மலையேறிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளில் பிரபலமான முகாம் பகுதியை பனிப்புயல் தாக்கியுள்ளது. அவர்களை துரிதமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 4,900 மீட்டர்(16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியானது தற்போது அதிக பனியால் மூடப்பட்டுள்ளது. இதனால் அவர்களை மீட்க தொழில்முறை மீட்பு பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திபெத்தின் ப்ளூ ஸ்கை மீட்புக் குழுவிற்கு இடிந்து விழுந்த கூடாரங்கள் மற்றும் தாழ்வெப்பநிலை நோயால் பாதிக்கப்பட்ட மலையேறுபவர்கள் குறித்து அவசர அழைப்புகள் வந்தன. நேற்று முன்தினம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. சிகரத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்வதால், டிங்ரி கவுண்டி சுற்றுலா நிறுவனம் எவரெஸ்ட் எழில்மிகு பகுதிக்கான அனைத்து டிக்கெட் விற்பனையையும் நுழைவையும் நிறுத்தியுள்ளது.
குடாங் நகரத்தில் ஏற்கெனவே 350 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டதால் ஆரம்ப மீட்பு முயற்சிகள் வெற்றிகரமாகியுள்ளது. மலைப்பகுதியில் இன்னும் சிக்கியுள்ள மீதமுள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று சீன அரசு கூறியுள்ளது.


