கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்றும், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், கரூரில் பார்த்த காட்சிகள் இன்னும் கண்களை விட்டு அகலவில்லை. கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கேன். விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கி உள்ளோம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
அரசியல் நிலைப்பாடுகளை விலக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும். கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது. உயிரிழந்தோர் எந்த கட்சியை சார்ந்தவராயினும் என்னை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் உறவுகள். சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமமான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும். எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார். பெரிய கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


