சென்னையில் நேற்று யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் பத்துநாள் கெடு விதித்தார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் செங்கோட்டையன் சந்தித்தார். இந்த நிலையில் கெடு விதித்த அடுத்த நாளே அவரது கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இந்த நிலையில், திடீரென கோவையிலிருந்து சென்னைக்கு நேற்று வந்த செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாகத் தகவல்கள் பரவின. எதற்காக அவர் சென்னை வந்தார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கோபி செட்டிபாளையம் திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ” என் மனைவி சென்னையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை பார்க்க சென்றேன். அதே சமயம் நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரிடத்திலும் நான் பேசவில்லை
என்னை பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா சட்டமன்றத்தில் உரையாற்றும் போது 100 ஆண்டுகள் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்றனர். அந்த கனவை நிறைவேற்றுவதற்கு தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர்மூச்சாக, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். இந்த நோக்கத்தோடுதான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை அன்று வெளிப்படுத்தினேன். என் குறிக்கோள் ஒன்றுதான். அந்த குறிக்கோள் அடிப்படையில் நேற்று யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை” என்றார்.


