
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, “வாக்குத் திருட்டு எப்படி நடைபெற்றது, எத்தனை வாக்குகள் நீக்கப்பட்டன உள்ளிட்டவை குறித்து விளக்குகிறேன். யாரோ ஒருவர் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்கு திட்டமிட்டு குறிவைத்து வருகிறார். இந்தியா முழுவதும் தேர்தல்கள் நடைபெறும் போது லட்சக்கணக்கான வாக்காளர்களின் விவரங்களை அழிக்க யாரோ ஒருவர் முயற்சி செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது ஆலந்த் எனும் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்காளர்களை யாரோ ஒருவர் நீக்கம் முயற்சி செய்துள்ளனர். அதேவேளையில் பல மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வேண்டுமென்றே கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேக்கப்பட்டார்கள். தனி நபர் ஒருவர் தனது அடையாளத்தை பயன்படுத்தி 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்.
வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை, மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான எதிர்க்கட்சிகளின் வாக்குகள் நீக்கப்படுகின்றன. இதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது. 2023-ம் ஆண்டில், ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை தோல்வியடைந்துள்ளது. மேலும் அந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணைய புகாரின பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தரவுகள் பதிவுகளின்படி, ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பாஜகவேட்பாளர் சுபாத் குட்டேதாரும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.பாட்டீலும் வெற்றி பெற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.