போயஸ் கார்டனில் விஜய்? ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தை விலைக்கு வாங்க முடிவு?

சென்னை: போயஸ் கார்டனில் வீடு வாங்க விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. முக்கியமாக ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ‘போயஸ் கார்டன்’ என்ற வார்த்தைக்கு எப்போதுமே ஒரு பவர் உண்டு. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல் அதிகார மையமாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்கிய இந்த போயஸ் கார்டன், தற்போது மீண்டும் அரசியல் அதிர்வலைகளை கிளப்பத் தொடங்கியுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தனது தற்போதைய நீலாங்கரை இல்லத்திலிருந்து போயஸ் கார்டனுக்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது அதைவிட ஒரு மாஸான ஹாட் டாக் அரசியல் வட்டாரத்தை உலுக்கி வருகிறது.

வேதா நிலையம் வெறும் வாடகைக்கோ அல்லது புதிய வீட்டிற்கோ போயஸ் கார்டன் செல்வது விஜய்யின் நோக்கமல்ல.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட அடையாளமான ‘வேதா நிலையம்’ இல்லத்தையே விலைக்கு வாங்கி, அங்கு குடியேற விஜய் தரப்பு காய் நகர்த்தி வருவதாக மிக நம்பகமான அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. விஜய் பதவியேற்றது முதல், ஈசிஆர் நீலாங்கரையில் இருந்து தினசரி 17 கிலோமீட்டர் தூரம் பயணித்து கோட்டைக்கு வருவது பாதுகாப்பு ரீதியாகவும், போக்குவரத்து நெரிசல் ரீதியாகவும் பெரிய சவாலாக மாறியுள்ளது.

இதற்காக சென்னை மையப்பகுதியில் ஒரு இல்லத்தை விஜய் தேடி வந்த நிலையில், அவரது பார்வை போயஸ் கார்டன் மீது விழுந்துள்ளது. ஆனால், இது வெறும் போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு மட்டுமல்ல, இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய பாரம்பரிய அரசியல் கணக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு மாபெரும் ஐகானாக ஜெயலலிதா திகழ்ந்தார். அவரது மறைவுக்குப் பின் அந்த இடத்தை நிரப்ப ஒரு வலிமையான தலைவர் இல்லாத சூழலில், விஜய் தற்போது அரியணையை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த அதே போயஸ் கார்டன் மண்ணில் கால் பதிப்பதன் மூலம், தமிழக மக்களின் மனதில் இருக்கும் ‘அம்மா’ என்ற ஆளுமையின் அரசியல் வெற்றிடத்தை தன்வசப்படுத்த விஜய் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவிடமாக மாற்ற அதிமுக அரசு முயன்றது. ஆனால், சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த இல்லம் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா மற்றும் தீபக் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த பிரம்மாண்ட சொத்தை, அதன் தற்போதைய வாரிசுகளிடம் பேசி, சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் விஜய் தரப்பு இறங்கியுள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போயஸ் கார்டனின் புதிய முகமாக, புதிய ஐகானாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது என விஜய் கருதுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் அதிமுக வாக்கு வங்கியையும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளின் ஆதரவையும் தன்பக்கம் ஈர்க்க முடியும் என்பது தவெக வியூக வகுப்பாளர்களின் கணக்கு. ஒரு காலத்தில் ஜெயலலிதாவைச் சந்திக்க ஒட்டுமொத்த இந்திய அரசியலின் தலைவர்களும் போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்த காலம் உண்டு. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பகுதி சற்றே அமைதியடைந்தது. இப்போது விஜய் அங்கு குடியேறினால், போயஸ் கார்டன் மீண்டும் தமிழக அரசியலின் அதிகாரப் புள்ளியாக, மெயின் பவர் சென்டராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.