அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை…

தர்மபுரி அருகே, மின்வாரிய ஊழியரின் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தடங்கம் சவுளுப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி தங்கமலர்(54). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 15ம் தேதி பெங்களூரில் வசித்து வரும் உறவினர் ஒருவரது வீட்டு ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க, குடும்பத்துடன் ஆனந்தன் சென்றிருந்தார். பின்னர், நேற்று முன்தினம் மதியம் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் மெயின்கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவை உடைக்காமல் சாவியை போட்டு திறந்து அதில் இருந்து செயின், வளையல், மோதிரம், ஜிமிக்கி, தங்க நாணயம் என 8 பவுன் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, விலை உயர்ந்த வாட்ச் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தங்கமலர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பீரோவின் சாவியை எடுத்து திறந்திருப்பதால், சாவி வைக்கும் இடம் குறித்து நன்கு தெரிந்த நபர்கள் தான் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.