திருமயம், ஜூன்10: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனூர் ஒச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(21), குளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (எ) தோல்பாஷா (27). அன்னாவாசல் பகுதியை சேர்ந்த சதீஷ் (24). நண்பர்களான 3 பேரும், நேற்று மதியம் திருமயம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுவாங்கி சாலையோரம் இருந்த பனைமரத்தின் அடியில் அமர்ந்து குடித்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த 35 வயது திருநங்கையை, போதையில் இருந்த 3பேரும் மஞ்சுவிரட்டு நடைபெறும் குளத்துப்பட்டி கண்மாய் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுபகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது திருநங்கையோடு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து திருநங்கையை சரமாரி தாக்கியதோடு மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஆகாஷ், தினேஷ் ஆகியோரை திருமயம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், திருநங்கையை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்து குளத்துப்பட்டி கண்மாய் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் உடலை போட்டு சென்றதும், இதில் நண்பர் சதீஷுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து திருமயம் போலீசார் குளத்துப்பட்டி கண்மாய்க்கு சென்று அங்கு கிடந்த திருநங்கை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொலை செய்யப்பட்ட திருநங்கை யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

More Stories
அடுத்தடுத்து 7 வீடுகளில் ஏசி காப்பர் திருட்டு…
திரைப்பட இயக்குநரின் 8 வயது மகன் மீது போதை கும்பல் தாக்குதல்:
தமிழ் சினிமாவை மாற்றியமைத்த உண்மையான முன்னோடி இயக்குநர் பாரதிராஜா – ஆளுநர் இரங்கல்