நெல்லை அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து – 21 பேர் படுகாயம்!

திருநெல்வேலி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த பேருந்து திருநெல்வேலி அருகே உள்ள பொன்னாக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது, அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறத்தில், எதிர்பாராதவிதமாக ஆம்னி பேருந்து மிக பலத்த சத்தத்துடன் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. பேருந்தின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு அலறினர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 21 பேர் உடல் மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் காயமடைந்த 21 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சென்னை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்