மதுரை அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், அய்யாபட்டி அருகே அதிவேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், விபத்தில் பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.