வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் கைது…

சென்னையில் வீட்டில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து தவெக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார்.

வழக்கமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டு மொட்டை மாடி மற்றும் பால்கனிகளில் மாடி தோட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஏறத்தாழ எல்லா வீடுகளிலும் மாடி தோட்டம் இருக்கும். இந்த செடிகளுக்கு நடுவேதான் கஞ்சா செடியும் மறைத்து வைத்து வளர்க்கப்படுகிறது. சிலவகை கஞ்சா செடிகள் பார்ப்பதற்கு வெண்டைக்காய் செடி போலவே தெரியும். எனவே வெளியிலிருந்து பார்த்தால் உடனே சந்தேகம் வராது. கஞ்சா செடி என்னதான் சந்தேகம் வராமல் இருந்தாலும், இப்படி வளர்ப்பதில் சிக்கல்களும் இருக்கின்றன. அதாவது, கஞ்சா செடி மற்ற செடிகளை போல் கிடையாது. இதிலிருந்து வரும் வாசம் மிகவும் அடர்த்தியானது. அழுகிய முட்டைகோஸ் அல்லது வெங்காயம் போன்றும், சில நேரங்களில் மூலிகை அல்லது புல் போன்றும் வாசம் வீசும். இது அக்கம் பக்கம் வீட்டினருக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். இப்படிதான் கஞ்சா செடியை வளர்பவர்கள் சிக்குகிறார்கள்

தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோவும் இப்படிதான் மாட்டியிருக்கிறார். அவர் தனது வீட்டின் பால்கனியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க துணியை கட்டி மறைத்திருக்கிறார். ஆனால், வாசனை விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். கஞ்சா செடியின் பூக்களிலிருந்த வந்த வாசம் அவரை காட்டி கொடுத்திருக்கிறது.

கஞ்சா செடியை வளர்ப்பவர்களை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு முறைகளை கையாளுக்கின்றனர். முதலில் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இது கஞ்சா செடிகளை எளிதில் அடையாளம் கண்டுவிடும். அதேபோல, அக்கம் பக்கத்தினர் அளிக்கும் தகவல்கள்தான் கஞ்சா செடி வளர்ப்பவர்கள் சிக்குவதற்கு முக்கிய காரணம். சில நேரங்களில் நண்பர்களுடன் ஏற்படும் சண்டையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துவிடுவதுண்டு. சென்னை சம்பவத்ததை பொறுத்தவரை, தவெகவினரே இப்படி செய்யலாமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். தன்னை தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் விஜய் இதைத்தான் ஊக்குவிக்கிறாரா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.