May 5, 2026

முடிவுக்கு வந்த மும்மூர்த்திகளின் அரசியல் வாழ்க்கை.. இனி மதுரையில் அதிமுகவால் சமாளிக்க முடியுமா?

மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் தவெக 8 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆனால் அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. இதன் மூலமாக மதுரையில் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மும்மூர்த்திகளின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு தவெக மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யாரும் எதிர்பார்க்காதவாறு விஜய்யின் தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அதிலும் முக்கிய மாவட்டமான மதுரையில் தவெக 8 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

ஆனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. மதுரை மக்களின் ஆதரவு காரணமாக மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று எம்ஜிஆர் தனது படங்களுக்கு பெயர் வைத்தார். ஜெயலலிதா காலத்திலும் கூட மதுரை அதிமுகவுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. ஆனால் 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலா 5 தொகுதிகளில் வென்றன. நகர்ப்புறங்களில் திமுகவும், புறநகரில் அதிமுகவில் வென்றிருந்தன. ஆனால் இம்முறை புறநகர்ப் பகுதியான திருமங்கலம் மற்றும் மேலூர் ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். ஆனால் மதுரையின் நகர்ப் பகுதியில் உள்ள 8 தொகுதிகளிலும் தவெக வென்றுள்ளது. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகிய இருவரும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். திருமங்கலம் தொகுதியில் ஆர்பி உதயகுமார் 2வது இடம் பிடித்து தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலமாக மதுரையில் அதிமுகவின் முக்கிய அடையாளமாக இருந்த மும்மூர்த்திகளின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.

இவர்கள் மூவரும் அதிமுகவில் தொடரும் பட்சத்தில், அது அவர்களின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதிமுகவின் தலைமை கவர்ச்சிகரமாக இல்லாத சூழலில், மதுரை மக்கள் வசீகர தலைமையை விரும்புபவர்கள். இதனால் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கட்சி மாறும் சூழல் உருவாகும் என்று இப்போதே அதிமுகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.