ஒவ்வொரு மகளிருக்கும் 58 ஆயிரம் இந்த திமுக அரசு கடன்பட்டுள்ளது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

அதிமுக 56வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் என்ற செல்வம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜன் செல்லப்பா

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில், :* பிஎல்ஓ மூலம் வாக்கு சேகரிக்கும் விண்ணப்பத்தாள் வந்துவிட்டதா? நாலாம் தேதி வரை கால அவகாசம் உள்ளது நிச்சயம் நாளை முதல் அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்வார்கள். தெற்குவாசல் மற்றும் விரகனூரில் இருந்து அவனியாபுரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்னார்.

பட்டுச்சேலை வழங்குவோம்

ஆனால், இப்போது வரை பாலம் கட்டப்பவில்லை. அதே போல விமான நிலைய விரிவாக்கப்பணிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தொழில்நுட்ப பூங்காவிற்கு இன்னும் நிலம் கையகப்படுத்தி முடிக்கப்படவில்லை. ஆமை வேகத்தில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெறுகிறது.

மதுரை வடக்கு தொகுதியை அம்மா(ஜெயலலிதா) எனக்கு ஒதுக்கி நிற்க வைத்தார். இந்த திருப்பரங்குன்றம் தொகுதி எனது சொந்தத் தொகுதி. முப்பதாயிரம் வாக்குகளில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். அடுத்த தீபாவளிக்கு மக்களுக்கு அதிமுக அரசு பட்டுச்சேலை வழங்கும். நீங்கள் நிச்சயம் எங்களை இங்கு வெற்றி பெற செய்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ரூ,58 ஆயிரம் கடன்

அதிமுகவுடன் பாஜக கூட்டணி, அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி,  முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டணி அமைந்துள்ளது. இறை உணர்வு இல்லாத ஆட்சி இன்று உள்ளது. மக்கள் இதை விரும்புவதில்லை. திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 58 மாதங்களுக்குப் பிறகு தான் மகளிர் உரிமைத்தொகை வாங்கினார்கள். ஒவ்வொரு மகளிருக்கும் 58 ஆயிரம் இந்த திமுக அரசு கடன் பட்டுள்ளது. இதில் விட்டுப் போனவர்களுக்கு விரைவில் கொடுக்கப் போவதாக சொல்கிறார்கள்” என கூறினார்.

ராஜ் சத்யன்

இக்கூட்டத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் பேசுகையில்,*எஸ்ஐஆர் திட்டத்தை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எஸ்ஐஆரை நடைமுறைப்படுத்துவது தமிழக அரசு ஊழியர்கள் தான். ஆனால், அதற்கு எதிராகவே திமுகவினர் போராடுகிறார்கள். பிரச்னைகளை மடைமாற்றம் செய்வதுதான் இவர்களின் அரசியல். இந்த அக்கறையற்ற ஆட்சியால் போதைப்பொருள் பழக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் சட்ட ஒழுங்கு நேரடியாக சீர்கெட்டு உள்ளது. பொம்மை முதல்வரால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

எஸ்ஐஆர் என்றால் அலர்ஜி

இதை சரி செய்ய 2026 எடப்பாடியாரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தின் வெற்றிக்கு விதை போடப்போவது நீங்கள்தான். நெசவாளர்களுக்காக பேசிக் கொண்டிருக்க கூடிய இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். உங்களுக்காக உழைக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய வாக்கு அவருக்கு தான் என்று எங்களுக்கு தெரியும்.

சார்(SIR) என்றாலே அலர்ஜி தான். யார் அந்த சார் என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. மத்திய அரசிற்கு எதிராக பொய் அரசியல் செய்வதுதான் இவர்களின் வழக்கம். 2026-ல் உங்களின் வாக்கு எடப்பாடியாருக்கும், இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பெரிய இடத்திற்கு செல்ல உள்ள உங்க வீட்டு பிள்ளை ராஜன் செல்லப்பாவிற்கு தான்” என்று பேசினார்.