September 10, 2026

“ரூ.”100 கோடி நில மோசடி!”.. பழனி கோயில் விவகாரத்தில் சிக்கிய சார் பதிவாளர்… அதிரடி சஸ்பெண்ட்..!!!!

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பழனி அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1.40 ஏக்கர் நிலம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்குச் சொந்தமானது. இது 1888-ம் ஆண்டு அறக்கட்டளை பத்திரத்தின்படி மடத்தின் பராமரிப்பு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்; இதை விற்பனை செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலம் பழனிக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்தமாக (Parking lot) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலத்தை, தனிநபர்கள் சிலர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறித் தங்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது போன்ற மோசடி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன.

இந்த நிலம் மடத்திற்குச் சொந்தமானது என்பதையும், இதைத் தனியார் நிலமாகக் கருத முடியாது என்பதையும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் அறநிலையத்துறை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மோசடி, ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

You may have missed