ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ: ‘குட்டி மியாவ்’ பிங்கிக்கு எதிராக திமுக நிர்வாகி போலீசில் புகார்..!

திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அலீம் அல்புஹாரி, இன்ஸ்டாகிராமில் “குட்டி-மியாவ்-90” என்ற கணக்கை பயன்படுத்தி செயல்பட்டு வரும் பிங்கி என்பவர் திமுக மீது அவதூறு பரப்பி வருவதாக கூறி அவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து ‘குட்டி மியாவ்’ பிங்கி வெளியிட்ட அவதூறு கருத்துகளை தொடர்ந்து, திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அலீம் அல்புஹாரி, இன்ஸ்டாகிராமில் “குட்டி-மியாவ்-90” என்ற கணக்கை பயன்படுத்தி செயல்பட்டு வரும் பிங்கி என்பவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், திமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறான மற்றும் அவதூறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், அமைந்தகரை காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புகாரில், கடந்த 24.05.2026 அன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ மூலம் திமுக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பரப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் திமுக கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களை பொதுமக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் கட்சியின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அலீம் அல்புஹாரி தனது மனுவில், தாம் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் விவாதங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருவதாகவும், இந்த விவகாரம் தங்களது அரசியல் மற்றும் பொது செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரில், இணையதள அவதூறு, மானநஷ்டம் மற்றும் சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்புதல் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதேபோல் சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் இணைய முகவரி உள்ளிட்ட ஆதாரங்களும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புகாரில், இந்த பதிவுகள் குறுகிய நேரம் மட்டுமே இருந்தாலும் அவை ஏற்கனவே பலரிடமும் பகிரப்பட்டுள்ளதாகவும், அதனால் உடனடி விசாரணை அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை குறிவைத்து வெளியாகும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற தளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் அரசியல் சர்ச்சைகளாக மாறுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் சட்டரீதியான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்த விவகாரமும் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.