நாடு தழுவிய அளவில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில் இயக்கத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) கண்காணிப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தி வருவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே பாதுகாப்பு மேம்பாடுகள், ரயில் பாதுகாப்பு: பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதி செய்வதற்காக சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், கேமரா விவரக்குறிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் ஏ.ஐ அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை எடுத்துரைத்தார்.
ரயில் பவனில் நடைபெற்ற உயர் மட்டப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய வைஷ்ணவ், மேம்படுத்தப்பட்ட அறிக்கை முறையின் மூலம் களத்தில் இருந்து உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கடந்த சில நாட்களாக ரயில்களில் தீ விபத்து தொடர்பான வழக்குகள் மற்றும் பல சம்பவங்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் போது சமூக விரோத சக்திகளின் ஈடுபாடு வெளிவந்தது உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
“இந்திய ரயில்வே இந்தச் சம்பவங்களைக் தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ளதுடன், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. பல சந்தர்ப்பங்களில், ரயில்வேயின் உடனடி மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகள் பெரிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க உதவியது” என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்களது பயணத்தின் போதும், ரயில் நிலைய வளாகத்தில் காத்திருக்கும் போதும், சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தீவிரமாக ஆதரவளிப்பதை ஊக்குவிக்கவும் தேசிய போக்குவரத்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது. “எனவே பயணிகள் பயணத்தின் போது எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரயில்வே வலியுறுத்தியுள்ளது. ரயில்வே வளாகத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது சந்தேகத்திற்கிடமான நபர் இருப்பதைக் கவனித்தால், உடனடியாக 139 என்ற ரயில்வே உதவி எண்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தின் போதான விவாதங்கள், மேம்படுத்தப்பட்ட அறிக்கை முறையின் மூலம் களத்தில் இருந்து உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தின. தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துதல், ரயில்வே நெட்வொர்க் முழுவதும் சிசிடிவி வரம்பை விரிவுபடுத்துதல் மற்றும் ரயில்வே வாரியத் தலைமையகம் மற்றும் கள மண்டலங்களுக்கு இடையே செயல்பாட்டுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது” என்று அது மேலும் கூறியுள்ளது.
அமர்புரா மற்றும் ஹவுரா நிலையங்களில் நடந்த சம்பவங்களின் போது ரயில்வே ஊழியர்களின் உடனடி நடவடிக்கை பெரிய பேரழிவுகளைத் தவிர்க்க உதவியதாக ரயில்வே புதன்கிழமை தெரிவித்துள்ளது.
“ராஜஸ்தானில் உள்ள அமர்புரா நிலையம் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், நபர் ஒருவர் லினன் (படுக்கை விரிப்பு பொருட்கள்) துணிகளுக்குத் தீ வைக்க முயன்றார், அதுவே பின்னர் தீ பரவக் காரணமானது.
ஹவுராவில், தீ விபத்துக்குள்ளான ரயிலின் கழிவறையில் இருந்து பெட்ரோல் நனைத்த துணி மீட்கப்பட்டது. அதேபோல், கோட்டாவில், ராஜ்தானி எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட ஆரம்பகட்ட தீயும் கழிவறையிலிருந்தே கிளம்பியுள்ளது. சசாராமில், ரயிலும் அதன் பெட்டிகளும் காலியாக இருந்தன; அதில் மின் உற்பத்தி இயந்திரம் எதுவும் இல்லை. யாரோ ஒருவர் எரியும் பொருளை உள்ளே வீசியிருக்க அதிக வாய்ப்புள்ளது” என்று அது கூறியுள்ளது.

More Stories
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…