தர்பூசணி சாப்பிட்ட 15 வயது சிறுவன் பலி…

ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவார் உயிரிழந்தார். குர்கோட் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த அகிலேஷ் மற்றும் சில குழந்தைகள் மாலை நேரத்தில் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். பழத்தை சாப்பிட்ட அகிலேஷிற்கு வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறுவன் அகிலேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அகிலேஷுடன் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்ட பிற குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காலையில் வெட்டி வைத்த பழத்தை பல மணி நேரம் கழித்து மாலையில் சாப்பிட்டதால் உணவு நஞ்சாகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணி பழம் ஆய்வுக்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வெட்டப்பட்ட பழங்களை நீண்ட நேரம் வெளியில் வைத்துச் சாப்பிட வேண்டாம் என்றும், குறிப்பாகச் சாலை ஓரங்களில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் மற்றும் ஜூஸ் வகைகளைத் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.