உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் சாதனை புரிகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேசிய விவசாயிகள் தினமான இன்று (டிசம்பர் 23) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உழவே தலை, உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேசிய விவசாயிகள் தினம் வாழ்த்துகள். வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கருணாநிதியின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் சாதனை புரிகிறது.

உழவர்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். நூறு நாட்கள் வேலைத் திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை. உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.