தை அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நதிகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் வைத்து வழிப்பட்டனர்.
தை மாதத்தில் வரும் அமாவாசை “தை அமாவாசை” என்று அழைக்கப்படுகிறது. இந்து மத மக்கள் இந்நாளில், முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
தை அமாவாசையின் சிறப்பு
அடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை வரிசையில், தை அமாவாசை மிகவும் முக்கியமானது. சூரியன் “தட்சிணாயண” காலத்திலிருந்து (தெற்கு நோக்கிய பயணம்) “உத்தராயண” காலத்திற்கு (வடக்கு நோக்கிய பயணம்) மாறும் தை மாதத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் தனிச்சிறப்பு பெறுகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நம்மை விட்டுப் பிரிந்த முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களின் ஆசி கிடைக்கவும் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதை பித்ரு கடன் என்று சொல்வார்கள்
இந்த நாளில் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம் ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம் என்று கூறப்படுகிறது.
வழிபாடுகள்:
தர்ப்பணம் கொடுத்த பின் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படத்தை வணங்கி, அவர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
புனித நீராடி தர்ப்பணம்
தை அமாவாசை அன்று நீர்நிலைகளில் நீராடி வழிபட மக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம், அந்தவகையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.






