சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ் தள’ பதிவில், “சென்னை கண்ணகி நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது – கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

மீண்டும், மீண்டும் கஞ்சா விற்பனையில்…,

ஏற்கனவே, 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே அப்பெண் ஈடுபடக் காரணமாக அமைந்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களுக்கு சந்தேகம் வருகிறது

மேலும், தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை எனக்கூறிய மருத்துவத்துறை அமைச்சருடனே, கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் தமிழகத்தில் திமுக தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று டி.டி.வி.தினகரன் தனது பதிவில் வாயிலாக தெரிவித்துள்ளார்.