
மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம் அமைய வழிவகுக்கும். மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இத்திருநாளில் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79- வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், நம் தாய்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு, நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும், மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும், இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம்.வாழிய பாரத மணித்திரு நாடு” என்று தெரிவித்துள்ளார்.