
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டம் பெறுவதை தவிர்த்து விட்டு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவி பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவியிடமிருந்து பட்டம் பெற மாணவிகள் வரிசையாக வந்தனர்.அப்போது ஆராய்ச்சிக்காக பட்டம் பெற வந்த நாகர்கோவிலை சேர்ந்த மாணவி ஜுன் ஜோசப் என்பவர் பட்டத்தைப் பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி அருகே வந்தபோது, அவரைப் புறக்கணித்துவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்று விட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். அவரின் இந்தச் செயலால், ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்லாது, விழா மேடையில் இருந்தவர்களும், பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி ஜுன் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை” என்று தெரிவித்தார். இதனால், பட்டமளிப்பு விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.