
நடத்தையில் சந்தேகப்பட்டு 5 குழந்தைகளின் தாயான தனது மனைவியை கணவன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்சந்திரா. இவரது மனைவி மதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 2 பெண் குழந்தைகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டு வாசலில் பூல்சந்திராவின் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், வீட்டுக்குள் இருந்த மதி அலறும் சத்தம் கேட்டு குழந்தைகள் அங்கு ஓடியுள்ளனர். அதற்குள் ரத்தம் வடியும் கத்தியோடு வீட்டை விட்டு பூல்சந்திரா தப்பியோடி விட்டார். வீட்டில் ரத்த வெள்ளத்தில் மதி இறந்து கிடந்தார். இதுகுறித்து குழந்தைகள் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கோக்ராஜ் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மனைவி யாருடனோ தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்ட பூல்சந்திராவிற்கும், அவரது மனைவி மதிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர். இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவியை பூல்சந்திரா கொலை செய்தது தெரிய வந்தது. தப்பியோடிய அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.