அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர்ந்த மனோஜ் பாண்டியன் வழியில், செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இதன் பின் தவெகவில் இணைகிறார்.
அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் செங்கோட்டையன். கட்சியின் மூத்த முன்னோடியான இவர் பலமுறை அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முகமாய் இருந்தவர். இவருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முதலில் இருந்தே முட்டல் மோதல் இருந்தது. அதற்கு காரணம் பாஜக உயர்மட்ட தலைவர்களுடன் செங்கோட்டையன் நேரடி தொடர்பில் இருந்தது தான்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாஜக, பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருமுகப்படுத்தும் பணியை செங்கோட்டையன் மூலமே தொடங்கியது. கடைசியில் அது, பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாய் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வைத்துள்ளது. தனக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என செங்கோட்டையன் கண்ட கனவு, கானல் நீராய் மாறிப்போனது.
அவரின் அதிருப்தியை தங்களுக்கு தவெக நிர்வாகிகள் சாதகமாக பயன்படுத்த நினைத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி நவம்பர் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் செங்கோட்டையன் இணைவதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அது போல தவெகவில் இணைய உள்ள செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நவம்பர் 27-ம் தேதி தவெகவில் இணைவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த செங்கோட்டையன், “ 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்துக்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு, அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூடாது என நினைத்து நீக்கியிருக்கிறார்கள். இது மனவேதனையாக இருக்கிறது. இப்போது எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை” என்று கூறியுள்ளார்.


