வாக்குச்சாவடி அலுவலர்களை மிரட்டும் திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நாளை (நவம்பர் 21) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. தி முகவைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது.
இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிமுக சார்பில், நாளை காலை 10 மணியளவில்
கள்ளக்குறிச்சி நகராட்சி, கச்சேரி சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இப்போராட்த்திற்கு , கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் இரா குமரகுரு தலைமை வகிக்கிறார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள்,கழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.


