
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி கோவிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நிறைவு பெற்றன. இந்த பெருந்திட்ட பணியில் திருமண மண்டபம், கலையரங்கம், பூங்கா, அன்னதான மண்டபம், பக்தர்கள் தரிசன வரிசை, பக்தர்கள் தங்கும் விடுதிகள், ராஜகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் ஜூலை மாதம் 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.