நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அத்துடன் தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்தொழில் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களின் படகு, மீன், வலைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு புறம் இலங்கை கடற்படை மறுபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இதுவரை தீர்வு காணப்படாத பிரச்னையாக உள்ளது.
இந்த நிலையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக 14 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். அவர்கள் 14 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3-ம் தேதி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், தற்போது 14 பேரை மீண்டும் கைது செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


