கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று (நவம்பர் 6) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவம்பர் 7) கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவ,சவுந்திரவள்ளி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


