கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ1 -ஆக இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கட்சி கொடி கட்டிய காரில் செங்கோட்டையன் நேற்று முன்தினம் பயணம் செய்தார். அங்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவையும் சந்தித்து பேசினார். அதன் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் செங்கோட்டையன் பங்கேற்றார்.
இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பெறுப்பேற்ற பிறகு 2019,2011, உள்ளாட்சி தேர்தல், 2024 தேர்தல் என தொடர்ந்து அதிமுக தோல்வியைச் சந்தித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தோல்வியையே காணாதவர். ஜெயலலிதா, ஒரு முறை தோற்றால் மறுமுறை வெற்றியைக் காண்பார். ஆனால், ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்து கொண்டு பணியாற்றி வந்தேன். கட்சி உடைந்து விடக்கூடாது என்றுதான், பத்து நாட்களுக்குள் பேச்சு தொடங்குகள் என்று வலியுறுத்தினேன். அப்போதே கெடுவா என்று கேட்டீர்கள். இல்லை என்றேன். 10 நாட்களுக்குள் முடிவெடுங்கள். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளலாம். யாரிடமாவது கருத்தும் கேளுங்கள். ஆனால், யாரைச் சேர்ப்பது என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம் என்று வலியுறுத்தினேன்.
நான் விதித்தது கெடு அல்ல, பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தான் என் கருத்தை முன் வைத்தேன். ஆனால், கெடு விதித்து விட்டார் என்று தான் செய்திகள் வெளியாகின. இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு என் கருத்தை சொன்னேன். நமது இயக்கத்தை வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனால், அதன்பிறகு எனது கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்றவற்றிலிருந்து நீக்கப்பட்டேன். அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்த வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் வலிமையோடு இருக்கும் என்று சொன்னார்களோ அதனை நிறைவேற்றவே எனது கருத்தை சொன்னேன். ஒருவேளை 2026-ல் வெற்றி வாய்ப்பை இழந்தால் ஏன் முன்பே சொல்லவில்லை என்ற கேள்வி எழும் என்பதால் தான், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், என்னைத்தான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பேசக்கூடிய பொறுப்பு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் இருக்கிறது என்பதால் நாங்கள் யாரும் அது குறித்து பேசாமல் இருந்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த கோயில் போன்ற அந்த பங்களாவில் என்ன நடந்தது என்பதை அறிய இதுவரை எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக்காதது ஏன்? நான் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். திமுகவின் பி டீம் யார் என்பதை இந்த நாடறியும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ1 -ஆக இருக்கிறார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுப்பேன்” என்றார். செங்கோட்டையன் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


