தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடிய அவரது 17 வயது மகள் உள்பட 5 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோயில் வீதியைச் சேர்ந்தவர் சித்ரா(36, பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது ஒரே மகளுக்கு 17 வயதாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், அதன் பின் படிக்காமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி வீட்டில் சித்ரா வீட்டில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து சித்ராவின் தங்கை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சித்ராவின் மகள் திடீரென காணாமல் போனார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், ராமநகர் மாவட்டம், கக்கலிபுராவில் உள்ள பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவிற்கு போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அவரது தாய் சித்ரா தற்கொலை செய்யவில்லை என்றும், தானும் தனது காதலன், நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தோம் என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனால் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து காதலன் உள்பட 4 பேரை போலீஸார் வளைத்து பிடித்தனர். அதில் அனைவரும் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், ஒருவரின் வயது 13 என்றும் தெரிய வந்தது.
தன்னுடன் படித்த வாலிபரை சிறுமி காதலித்துள்ளார். இதற்கு சித்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மகளை அவர் கண்டித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது மகள், தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பியோடியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், 17 வயது சிறுமி உள்பட ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


