நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்ரல் 2025- அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் அக்டோபர் 27, 2025 அன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பணம் பெற்று ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை தமிழக காவல்துறை தலைவருக்கு அறிக்கையை அனுப்பியது.
சுமார் 150 பணியிடங்களுக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.888 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. கடந்த ஏப்ரல் 2025-ல் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் கிடைத்த வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியதாக அமலாக்கத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஏற்கெனவே மறுப்பு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,, “ஏற்கெனவே எல்லாம் சரிபார்த்து, நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ரெய்டு செய்த போது, சில டாக்குமெண்ட்டுகள் கிடைத்தது என்று கூறி இதெல்லாம் உண்மையா என பார்க்கச் சொல்லி அமலாக்கத் துறை போலீஸாரிடம் கொடுத்திருக்கிறது.
இதனால் முறைகேடு குறித்து போலீஸார் விசாரிப்பார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டிப் பார்ப்பதற்காக இப்படி செய்யலாம். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும். இந்த விசாரணையை பார்த்த பின், அவதூறு வழக்குத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உறுதி செய்வோம்” என்றார்.


