தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நடைபெறும் போட்டியில் அனல் பறக்கிறது. இந்த நிலையில்,பிஹார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். அப்போது, தமிழ்நாட்டில் பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என பழிசுமத்தி பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும்.
அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று. தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பிஹாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.


