சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அக்.18-ம் தேதி ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு தவெக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதமாக அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருந்த தவெக தலைவர் விஜய், புதிய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் அதிமுக- தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறோம். விஜய்யின் பிரசார பயணம் தொடரும். அனுமதிக்காக காத்திருக்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம். விஜய்யின் ஆறுதல் சந்திப்பு தனிப்பட்டது. அரசியலாக்க விரும்பவில்லை” என்று கூறினார். தேர்தல் கூட்டணில் சேர அதிமுக அழைப்பு விடுத்த நிலையில் அதை தவெக நிராகரித்துள்ளது.


