தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் வினா எழுப்பினார்.அதற்கு, “மீண்டும் திமுக ஆட்சி வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது” என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இன்றய சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் பிரிந்து இருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அண்ணா திமுக பிரிந்து இருக்கிறது. அதைப்போல பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து இருக்கிறது. ஐயாவுக்கும்..அன்புமணி ராமதாஸ் சாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது திமுக ஆட்சி வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது.
திமுகவிற்குத் தான் இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அதற்கு முக்கிய வாய்ப்புகளே எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடைக்கிறது என்பது தான். அப்படி பிரிந்து கிடைக்கும் காரணத்தால் திமுக மீண்டும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது. அப்படி நான் சொல்லவில்லை பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்” என்று பதிலளித்தார்.


