ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆனால், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்கவில்லை. இதனால் ரஷ்யாவின் இரு பெரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் தடை விதித்தார். ரஷ்யாவின் மிகப்பெரும் வருவாய் ஆதாரமாக திகழும் இந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில்,, ரஷ்யாவுடன் போரை நடத்தி வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவை பெறுவதற்காக இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்த லண்டன் சென்றுள்ளார். அங்கு வெளியுறவுத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை ஜெலன்ஸ்கி சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது மட்டுமல்ல அனைத்து ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். ரஷ்ய ஏரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும். நாங்கள் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களை குறி வைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தி வருகிறோம். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


