கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சில் 4 பேர் பலியானார்கள்.
கென்யாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரைலா ஒடிங்கா (80) பிரதமராக இருந்தார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட இவர் இந்தியாவிற்கு ஆயுர்வேத சிகிக்சை பெற இந்தியா வந்தார். கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நிலையில், அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஒடிங்காவின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொது மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது கென்ய படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை கென்ய படையினர் வீசினார். அத்துடன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், மக்கள் கூட்டம் சிதறி ஓடியது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


