இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை செல்வதால் அக்.21,22 ஆகிய தேதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்திய முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, அக்டோபர் 17-ந் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இம்மாத இறுதியில் சாமி தரிசனம் செய்ய வருகிறார்.
இதற்காக கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அக்டோபர் 21-ம் தேதி செல்லும் திரவுபதி முர்மு அக். 22-ம் தேதி பம்பை அருகே உள்ள நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பைக்கு வரும் திரவுபதி முர்மு, இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சபரிமலை சென்று தரிசனம் செய்கிறார். அவரின் சபரிமலை வருகையால் அக். 21,22 ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


