மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் நாளை தேர்வு- இந்திராணி கைது?

தமிழக அரசியலை உலுக்கிய மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டால் மேயர் இந்திராணி பதவியை இழந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி பதிவு மற்றும் திருத்தங்களில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. சுமார் 200 கோடி ரூபாய் அளவில் வரி விதிப்பு மோசடி நடந்துள்ளதாக முன்னாள் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் புகார் செய்தார். சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து இதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பை ஏற்படுத்தினர் என்று அதிமுக கவுன்சிலர் ரவி தொடர்ந்த வழக்கு. உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், உதவி வருவாய் ஆய்வாளர், உதவி ஆணையர், அலுவலர்கள் மற்றும் சில புரோக்கர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையொட்டி மதுரை மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ஆகியோரிடம் அமைச்சர் கே.என்.நேரு நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், சொத்து வரி மோசடியில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தும் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், . ரூ.200 கோடி சொத்து வரி முறைகேட்டுக்கு மேயர் இந்திராணிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தின. அதே போல, மண்டலத் தலைவர்கள் பதவி பறிக்கப்பட்ட திமுகவினரும் மேயர் ராஜினாமா செய்யாமல் இருந்தததால் அதிருப்தியில் இருந்தனர். ஏற்கெனவே நெல்லை, கோவையில் கோஷ்டி பூசலில் மேயர்கள் பதவி பறிக்கப்பட்ட நிலையில், மதுரை மேயர் பதவி பறிக்கப்பட்டால் கடும் விமர்சனமாகுமே என்று திமுக கருதியது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் மதுரை மாநகராட்சி ஊழல் விஷயத்தில் திமுக அரசு தனது கட்சிக்காரர்களை காப்பாற்றுகிறது என்று குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மதுரை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா ஆகியோரை சென்னைக்கு நேற்று வரவழைத்து விசாரித்துள்ளனர். இதன் பின் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேயர் இந்திராணியிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தனது மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்தார்.இந்த நிலையில் புதிய மேயர் நாளை (அக்டோபர் 17) தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கிடையே பதவியை ராஜினாமா செய்த இந்திராணியை இவ்வழக்கில் போலீஸார் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *