திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என்று ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அங்கு மாணவிகள் மத்தியில் அவர் பேசிய பேச்சு தான், இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் ஆனந்திபென் படேல் பேசுகையில்,ஞ திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவுகளின்படி சேர்ந்து வாழக்கூடாது. லிவ் இன் உறவுகளின் விளைவுகளைப் பார்க்க விரும்பினால், அனாதை இல்லங்களுக்கு நீங்கள் சென்று பாருங்கள். அங்கு 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள், தங்கள் கைகளில் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.
திருமணம் செய்யாமல் வாழும் லிவ்-இன் உறவுகள் தற்போது நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அதில் ஈடுபட வேண்டாம். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. லிவ் இன் உறவுகளில் ஈடுபடும் பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்பட்டதாக வந்த செய்திகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். லிவ் இன் உறவில் ஈடுபட்டால் நீங்களும் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்.
ஆண்கள் இளம்பெண்களை ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு, பின்னர் கைவிட்டு செல்கின்றனர். இவை நமது பண்பாடு அல்ல. இதுபோன்ற விஷயங்களுக்கு இரையாகிவிடாமல், உன்னதமான இலக்குகளுக்கு பெண்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
கடந்த 10 நாட்களாக, இதுபோன்ற வழக்குகள் பற்றிய தகவல்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, நம் நாட்டு பெண்கள் ஏன் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறேன். பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரில் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகமான மற்றும் தனித்துவமான கதை இருக்கிறது.
ஒரு நீதிபதியுடனான சந்திப்பின் போது அவரும் பெண்கள் மீது அக்கறை கொண்டு பேசினார். பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே முடிவெடுங்கள். தவறான முடிவுகளால் பிறந்த வீட்டிலோ அல்லது புகுந்த வீட்டிலோ நீங்கள் நிம்மதி இழக்க நேரிடும்” என்று பேசினார். உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென்னின் பேச்சு பிற்போக்குத்தனமானது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


